2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இந்தியாவுடனான இறுதிப் போட்டியில், பணத்திற்காக கிண்ணத்தை தாரைவார்த்ததாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
கொழும்பில் இருந்து ஒளிபரப்பாகும் தனியார் ஊடக நிகழ்வில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்தியாவுடனான இறுதிப் போட்டியில் கிண்ணத்தை சுவீகரிப்பதற்கான இயலுமை இலங்கை அணியிடம் காணப்பட்ட போதிலும், பணத்திற்கான அது தாரைவார்க்கப்பட்டதை தாம் பொறுப்புடன் கூறுவதாகவும் மஹிந்தானந்த அளுத்கமகே கூறினார். இந்த விடயம் தொடர்பில் விவாதத்தில் ஈடுபடவும் தாம் தயாராகவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பணத்திற்காக கிண்ணம் தாரைவார்க்கப்பட்டதில் வீரர்களை இணைத்துக்கொள்ளவில்லை எனவும் ஒருசில தரப்பினரால் இந்த விடயம் மேற்கொள்ளப்பட்டதாகவும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சுட்டிக்காட்டினார்.
சகல சாட்சியங்களையும், ஆதாரங்களையும் முன்வைக்க சங்கக்கார வலியுறுத்தல்!
இதேவேளை, முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் கருத்து தொடர்பாக பதிலளித்துள்ள அப்போதைய அணித்தலைவரான குமார் சங்கக்கார, இது பாரதூரமானதொரு குற்றச்சாட்டு என கூறியுள்ளார்.
இது பாரதூரமானவொரு குற்றச்சாட்டாகும். அவர் தன்னிடமுள்ள சகல சாட்சிகளையும் ஆதாரங்களையும் சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கும் ஊழல் மோசடி ஒழிப்புப் பிரிவுக்கும் வழங்க வேண்டும். அவ்வாறு நடந்தால் எவரும் வெவ்வேறு விடயங்களை சிந்திக்க வேண்டியிருக்காது. சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இதன் ஆழத்திற்கு சென்று செயற்பட முடியும். அதுதான் சிறந்த செயற்பாடு. எனது நினைவுக்குட்பட்ட வகையில் அப்போது விளையாட்டுத்துறை அமைச்சராக அவரே இருந்தார் என குமார் சங்கக்கார குறிப்பிட்டுள்ளார்.
பெயர்களையும், ஆதாரங்களையும் முன்வைக்க ஜெயவர்த்தனே வலியுறுத்தல்!
2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியின் உபதலைவராக செயற்பட்ட மஹேல ஜயவர்தன இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சர்கஸ் கண்காட்சி ஆரம்பமாகியுள்ளதைக் காண முடிகின்றது. 2011ம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றிருந்தால் அதற்கான ஆதாரங்களையும், தொடர்புடையவர்கின் பெயர்களையும் முன்வைக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
ஆதரங்களை வெளிப்படுத்த முரளியும் வலியுறுத்தல்!
குறித்த இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக குற்றம் சுமத்தினால், அத்துடன் சம்பந்தப்பட்வர்களின் விபரங்களை வெளிப்படுத்த வேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் சூழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனும் வலியுறுத்தியுள்ளார்.
Category: விளையாட்டு, புதிது
Tags: இந்தியா, இலங்கை